புதன், 22 மார்ச், 2017

கேரளாந்தகன் திருவாயில் தொடர்ச்சி ....


நம் தஞ்சை கோவில் மொத்தம் ஆறு திருவாயில்களைக் கொண்டது

1. கேரளாந்தகன் திருவாயில்
2. இராஜராஜன் திருவாயில் 
3. அணுக்கன் திருவாயில் 
4. மேற்கு வாயில்
5. தெற்கு வாயில் 
6. தெற்கு வாயில் 



இவற்றில் இன்று நம் காணப் போவது கேரளாந்தகன் திருவாயில் தொடர்ச்சியே

கேரளாந்தகன் திருவாயில்
கி .பி . ஆயிரமாவது ஆண்டில் தமிழகத்தில் இருந்த கோபுரங்களில் மிக பெரிய கோபுரமாக திகழ்ந்தது தஞ்சை பெருங்கோவிலின் கிழக்கு கோபுரமான கேரளாந்தகன் திருவாயில் ஆகும் .

பிற்காலத்தில் ஏழுநிலை முதல் பதின் மூன்றுநிலைக் கோபுரங்கள் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்தது இக்கோபுரமே.

97'2" நீளம்,55'9" அகலம் .11௦ ' உயரத்துடன் இக்கோபுரம் அமைந்துள்ளது .
இக்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது .
 1.உபபீடம் 
2.அதிஷ்டானம் 
3 .வேதிகை 
4.பித்தி 
5 .பிரஸ்தரம்  
என்னம்மா இது புரியாத மொழி போல இருக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றலாம் ...
விளக்கம் இதோ 


1.உபபீடம்
அதிஷ்டானம் என்னும் பீடத்திற்கு வலுவூட்டும் அடித்தளமாய் அமைந்த உறுப்பே உபபீடம் ஆகும் .
கடைக்கால்(உபானம் )  மீது பூமி மட்டத்திற்கு மேலாக அமைந்திருக்கும் முதல் கட்டிட அமைப்பு ஆகும் .

2.அதிஷ்டானம் (பீடம் )
ஒரு கோபுரத்தின் அடித்தளமே அதிஷ்டானம் ஆகும் .அதற்க்கு வலுவூட்டுவதற்கும் ,அழகுபடுத்துவதற்கும் உதவுவது தான் உபபீடம் ஆகும் .

3.வேதிகை  
வேதிகை என்பது அதிஷ்டானம் மேல் அமைந்துள்ள திண்ணை போன்ற அமைப்பு மற்றும் காலுள்ள பீடங்கள் இவையே வேதிகை எனப்படும் .

4.பித்தி (பாதசுவர் )
 அதிஷ்டானத்திற்கு மேலாக உத்திரத்திற்க்கு கீழ்வரை உள்ள பகுதி பித்தி ஆகும் .
இந்த பித்தியை வெறும் சுவராக அல்லாமல் கலைநயத்துடன் வடிவமைப்பர்,எனவே இப்பாதச்சுவரை அரைத்தூண்கள்,தோரணங்கள் ,கோஷ்டங்கள் போன்ற அலங்காரத்துடன் அமைப்பர் .

5.பிரஸ்தரம்   
அதிஷ்டானம்,பாதசுவர் ஆகியவற்றை முடும் வகையில் அமைவதே பிரஸ்தரம் ஆகும் .

(இந்த நிலைகள் பற்றிய விரிவான விளக்கத்தை மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன் . அதில் ஒவ்வொன்றின் அளவுகள் ,வகைகள் ,கால மாற்றங்கள் அனைத்தையும் காண்போம் )

மீண்டும் கேரளாந்தகன் திருவாயிலில் நுழையலாம் 
பித்தியில் நான்கு அரைச் செதுக்குருத் தூண்களும் ,பக்கத்திற்கு இரண்டாக எட்டுக் கோஷ்டங்களும் தெய்வ உருவமின்றி காணப்படுகிறது .

உபானத்திலிருந்து இரண்டாம் தளத்தின் பாதி சுவர் வரை கல்லாலும் ,அதற்கு மேலாக செங்கற் கட்டுமானத்தளும் அமைந்துள்ளது .

இரண்டாம் தளத்திற்கு மேலாக ஒவ்வொரு தளத்திலும் பயன்படுத்தப்பட்ட மரங்கள் அகற்றப்பட்டதால் ஒவ்வொரு தளமும் சிதைந்தே காணப்படுகிறது .

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் மேல்தளத்தில் இரண்டு சிறு ஆலயங்கள் உள்ளன .அவற்றில் சிறிய தோரண வாயில்கள் உள்ளன .பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி திருமேனிகள் நித்ய வழிபாட்டில் அபிடேயத்திற்கு உட்பட்டது என்பதால் அபிடேக நீர் வெளியேறும் அமைப்புகளும் உள்ளது .

இப்பதிவின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம் .மீண்டும் ஒருமுறை தஞ்சையின் அழகையும் ,அதிசயத்தும் காண்போம் .

வெள்ளி, 2 டிசம்பர், 2016

கேரளாந்தகன் திருவாயில்

மிகப்பெரும் இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இன்று பகிரப்போகும்  பதிவு நம் தஞ்சை நுழைவாயல் பற்றி

நானும் தஞ்சைக்கு அடுத்த அடி இன்னொரு கோவிலை பற்றி செய்தி பகிர விரும்புகிறேன் ஆனால் எனக்கு முடிவு என்பது இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு அறிவுத்துகிறது தஞ்சை என்னும் வியக்கவைக்கும் அதிசயம் .

இடைக்கால சோழர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களில் முதலிடம் தஞ்சைக்கு தான் கொடுக்கின்றனர் ஆய்வாளர்கள் .தஞ்சை கோபுர நுழைவாயில்களை ஆராயும்போது அதில் அதற்கு முன் எந்த வாயில்களிலும் இல்லாத புதுமைகள் உள்ளன .


முதல் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் இந்த கோபுரத்தில் கீீழ்நிலையில் 
சிற்பங்கள் இடம் பெறவில்லை என்றாலும் முதற்தளத்தில் வடக்கு மற்றும் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி ,பிரம்மன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளது .
இதில் என்ன புதுமை என்று கேட்கின்றீர் அனைத்து கோவில்களில் உள்ளது போல் தட்சிணாமூர்த்தி உருவம் அமைந்துள்ளது ஆனால் பிரம்மன் உருவ அமைப்பு மாறுபட்டு உள்ளது .

குடையின் கீழ் சடா மகுடராய் தாடி,மீசை உடன் நான்கு தலைகளுடன் ஒரு காலை  மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளார் வலது  மேற்கரத்தில் இஸ்ருவம்,இஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளும் ,கீழ் புறத்தில் அக்க மாலையும் ,இடது புறத்தில் மேற்கரத்தில் ஜலகெண்டியும் ,கீீழ்கரம்  சுவடிபிடித்த நிலையில் உள்ளார் .

இதுல என்னம்மா இருக்கு அப்படின்னு கேட்கின்றிரோ முற்கால ,பிற்கால சோழர் கோவில்களில் உள்ள பிரம்மன் தாடி ,மீசை இல்லாமலும் கையில் வேள்வி கரண்டிகள் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர் .
இது தான் புதுமை இராஜரஜனை தொடர்ந்து இராஜேந்திர சோழன் அமைத்த கங்கை கொண்ட சோளீசுரம் கோவிலிலும் இரு தேவியர் சாவித்திரி ,சரஸ்வதி பக்கம் நின்ற கோலத்தில் வேள்விக் கரண்டியும் ,தர்ப்பை புல்லும்  உடையவராய் ,தாடி ,மீசை உடன் உள்ளார் .

முற்கால ,பிற்கால சோழர் சிற்ப மரபில் காணப்படாத இப்புது வடிவம் தஞ்சை கோபுரத்தில் எவ்வாறு இடம் பெற்றது என்ற கேள்விக்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குவது இக்கலை மரபு சோழர்களின் குருமார்களாக இருந்த லகுளீசபாசுபத மர்கத்தினரால் அறிமுகமான ஒரு மரபு .
சர்வசிவ பண்டிதர் ,ஈஸ்வர சிவபண்டிதர் போன்ற ராஜாகுருமார்கள் ஆர்யதேசம் ,கௌடதேசம் போன்ற வடதேசம் இருந்து வந்தவர்கள் .இச்செய்தி தஞ்சை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது .


வடஇந்திய பகுதிகளில் மத்தியகால சிற்பங்களில் பிரமன் வயோதிகராகவும் ,வேல்விக்குரியவராகவும் ,தாடி ,மீசை உடன் காணப்படுகிறது.



மற்றவர் மரபையும் தன் மரபு  போல் ஏற்று அதை தான் நிறுவிய கோவிலின் முதல் நுழைவாயிலில் அதை பதிவிட்டு தன் தலைமுறைக்கும்  மற்றவர் மரபை மதித்து நடக்க கற்றுகொடுதவன் நம் இராஜராஜ சோழன் என்பதில் சந்தேகமில்லை . 

அடுத்த வாயிலில் உள்ள புராண கதைகளுடன் அடுத்த பதிவில் 
ச(சி)ந்திப்போம் ....
                                                                

சனி, 18 ஜூன், 2016

கோபுரம்

கோபுரம் இந்த வார்த்தை பலருக்கு நினைவு படுத்துவது மஞ்சள் ,குங்குமம் விளம்பரமாக இருக்கலாம் .ஆனால் இந்த வார்த்தையைக் கொண்டு பெரும் ஆராய்ச்சியே நடந்துள்ளது .
"கோபுரம் " இந்த சொல் தமிழ் சொல் தானோ என்பதே முதல் கேள்வி ?
நாம் அனைவரும் ஒரு நொடி யோசிக்காமல் கூறுவது "ஆம் " என்பது மட்டுமே .
ஆனால் உண்மை இது நம் தமிழ் மொழி சேர்ந்த சொல் அல்ல என்பதுதான் .
அது எப்படி சொல்றிங்க ?என்ற கேள்விக்கு பதில் நம் இந்தியர்களின் இலக்கிய நூல்களே .

பிறமொழி நூல்களையும் தமிழ் நூல்களையும் "கோபுரம் " என்ற சொல் பயன்படுத்தப்பட்ட காலத்தின் அடிப்படையில் தமிழ் நூல்களுக்கு முன்பே பிறமொழி நூல்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"கோபுரம்" என்ற சொல் சமஸ்கிருதம் ,பிராகிருதம்,பைசாசம் போன்ற மொழிகளில் தோன்றி தமிழ்க்கு வந்ததாக கூறுகின்றனர் .
நாம் அறிந்தவரை கோபுரம் எனும் சொல் கோவிலின் நுழைவு வாயிலை குறிக்கும் .ஆனால், சமஸ்கிருத நூலில் "கோ=பசு "வையும் "புரம்=காப்பது "என்றும் கூறுகின்றனர் .

கோபுரம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கூறப்படுகிறது .
"கோபுரம்என்பது  பெருவாயிலின் பெயரே 
புதவு வாயிற் புகு பெரும் புழையே "   (147)
"கோபுர வாயிற்றிண்ணையின் பெயர் 
அளிந்த மவ்வழிச் சார் திண்ணை யாகும் ......"  (148) 
இந்தப்பாடல் கி. பி 9ஆம் நுற்றாண்டு சேர்ந்த திவாகர நிகண்டு என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் பல நூல்களில் இச்சொல்லின் பொருள் மாறுபட்டு உள்ளது .
அவை :கூடம் ,சிகரம்,தொட்டி ,வாரி ,துவாரம் ,வாசல் ... என்று நீள்கிறது .
அட இதெல்லாம் இருக்கட்டும் "கோபுரம்"என்ற சொல் எப்போ தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்டது ?என்று கேள்வி உங்களிடம் வந்திருக்கும் .

கி .பி 4 ஆம் நுற்றாண்டில் இயற்றப்பட்டதாக கருதப்படும் "சிலப்பதிகாரம் ,மணிமேகலை  "போன்ற நூல்களில் கோபுரம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை "வாயில் "  என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது .


சங்க தமிழ் நூல்களுக்குபின் இயற்றப்பட்ட பெருங்கதை என்னும் நூலில் நான்காம்  காண்டமான 'வத்தவ காண்டத்தில் '''கொற்றங்கொணண்டது" என்னும் பகுதியில் உதயணன் வருடகாறன் முதலியோருக்கு சிறப்பு செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது .

"வாழிய ...
கோபுரந் தோறும் பூமழை பொழியச் 
சேயுயர் மாடத்து வாயில் ....."       (23-25) என்றும் 
மேலும் நூலின் பல பகுதியில் பயன்படுத்தயுள்ளர் .

இந்த நூலை பதிப்பித்தவர் நம் உ.வே சாமிநாதையர்.இவர் இன் நூல்   குணாட்டியர் என்பவரால் பைசாச மொழில் இயற்றப்பட்ட பிருகத்கதா  என்னும் நூலின்  மொழிபெயர்பே  என்று கூறுகிறார் .


மிண்டும் அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம் .


வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தஞ்சை அரண்மனை


தற்போது தஞ்சையில் அழகு கொஞ்சும்  அரண்மனையின் பெரும்பகுதி நாயக்கர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் துவங்கப்பட்டு இரகுநாத நாயக்கர் மற்றும் விசயராகவா நாயக்கர்கள் கைவண்ணத்தில் முடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன .

இரகுனாதர் காலத்தில் " விசய விசாலம் என்றும் இரகுநாத விலாசம்" என்றும்  விசயராகவன் காலத்தில் " விசயராகவா விலாசம் "என்றும் அரண்மனை அழைக்கப்பட்டதாம்.

அன்று தஞ்சையை அலங்கரித்த சோழர் கால அரண்மனை பற்றிய சரியான தகவல்கள் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று அறியப்படுகிறது .

ஆனால் இவற்றையும் தாண்டி நம் புலவர்களின் பாடல்கள் சான்றாக நிற்கின்றது .

கருவூறார் பாடலில் 

"இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை " என்றும் 

அருணகிரியார் பாடிய பாடலில் 

" பொன் மாளிகைத் தஞ்சை மாநகர் " என்றும் 

அவர்கள் பாடல் வழியாக தஞ்சையில் மாட மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டது என்று தெளிவாகிறது மேலும் சாகித்ய ரத்நகரம் ,ரகுநாத நாயக்கப் யூதயமு ,மன்னாருதாச விலாசம் போன்ற நூல்களிலும் அரண்மனைப்பற்றி கூறப்பட்டுள்ளது  .

மேலும் தற்போது உள்ள அரண்மனை மராட்டியர் காலத்தில் அவர்களின் கட்டிடகலையின்படி நுணுக்கமான கலைவன்ணங்கள் இடம் பெற்றுள்ளதாம் . இந்த அரண்மனை சுமார் 400 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டதாலும் இதில் 75% அழிந்துவிட்டதாம் 

 தஞ்சை அரண்மனை வளாகம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது .
இவ்வளாகம் முக்கியமாக நான்கு கட்டிடங்களை தாங்கி உள்ளது.

அவை : மணிமண்டபம் 
                 ஆயுத சேமிப்பு  மாளிகை
                  தர்பார் மண்டபம்  
                  நீதிமன்றம்


மணிமண்டபம் 

 மணிமண்டபம் 11 மாடிகள் கொண்டதாகும் ஆனால் தற்பொழுது 7 மாடிகள் 34.8 மீட்டர்  மட்டுமே உள்ளது .இது மேலும் .
ஒவ்வொரு தளத்திலும் 4 புறமும் வளைந்த சாளரங்கள் காணப்படுகிறது ஆதலால் ,மக்கள் இந்த மண்டபத்தை தொள்ளக்காது மண்டபம் 
என்றும் அழைக்கப்படுகிறது. 
இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .


ஆயுத சேமிப்பு மாளிகை 

ஆயுத மாளிகை கோபுர வடிவில் உள்ளது இதில் அமைந்துள்ள படிகள் மிகவும் சிக்கலான அமைப்புடன் காணப்படுகிறது .




தர்பார் மண்டபம் 

தஞ்சையை ஆட்சி செய்யும் அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரியும் மண்டபம் தர்பார் மண்டபமாகும் .பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன .இந்த மண்டபம் முன் ஒரு மைதானமும் அமைந்துள்ளது .


 
 நீதிமன்றம்

இந்த மண்டபம் மேலும் ஜார்ஜவா மாளிகை என்றும் ,சதர் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது .சதர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் நீதிமன்றம் என்று பொருள் ஆகும் .இந்த மண்டபம் 7 மாடிகள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்பொழுது 5 மாடிகள் மட்டுமே உள்ளது .



 

வியாழன், 14 மே, 2015

தஞ்சையின் அளவுகோல் ......

தஞ்சை குறைவில்லாத புதையலின் தேசம் 

அளவில்லாத அழகின் இருப்பிடமான தஞ்சை பெரிய கோவிலின் அளவுகோல் பற்றி இன்று தெரிந்துகொள்வோம் .....

தஞ்சை பெயர்  காரணத்தில் குறிப்பிட்டது போல தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி ". நெல்மகள் நடனமாடிய தஞ்சையில் அவளையே அளவுகோளாக வைத்து கட்டியது தான் நம் தஞ்சை பிரகதீஸ்வரர்(பெரிய) கோவில் .

விரல் என்னும் அளவுகோல் தான் பயன்படுத்த பட்டுள்ளது .

விரல் அப்படி என்றால் ? 

ஒரு விரல் என்பது 8 நெல் கதிரை அகல வாட்டில் வைத்தால் கிடைக்கும் அளவு அதாவது 33 மில்லி மீட்டர் ( 33 mm ) . 



பத்து விரல்கள் சேர்ந்த அளவு அலகு என்று அழைக்கப்பட்டுள்ளது .
௦.33 மீட்டர் (௦.33 m) .

இருபத்துநான்கு விரல்கள் சேர்ந்த அளவு முழம் என்று அழைக்கப்பட்டுள்ளது .

கோவிலின் அளவுகள் :

பல நூல்களில் பல முரண்பட்ட அளவுகள் குறிப்பிட பட்டுள்ளது அவை 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை தஞ்சை விமானத்தின் அளவை குறிப்பிடுகின்றன .

ஆனால் அவர்கள் பயன்படுத்திய அளவுகோலின் படி பார்க்கையில் 
விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள் ஆக இருந்திருக்க வேண்டும் . அப்படியெனில்  59.40 மீட்டர் .

இதன்படி சிவலிங்கத்தின் உயரம் 12 அலகுகள் .அதாவது சரியாக சிவலிங்கத்தை விட விமானம் 15 மடங்கு உயரம் என நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும் .



மேலும் நம் தஞ்சை பெரியகோவில் கருவறையின் இரு தளங்கள் ,விமானத்தின் 13 தளங்கள் சேர்த்து மொத்தம் 15 தளங்கள் கொண்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.





கருவறையின் வெளிச்சுவர் தூண்களின் அகலம்  10 விரல்கள் அதாவது
1 அலகு ஆகும் . இதன் அடிப்படையில்  கருவறை 24 அலகுகள் கொண்ட சதுரமாகும் .

மேலும்  கருவறையின் உட்சுவர் 48 அலகுகளும் ,வெளிச்சுவர் 72 அலகுகளும் கொண்ட சதுரமாகும் .

விமானத்தின் அடிப்பகுதி ( உபானா ) 90 அலகுகள் .
இதன் அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 m) கொண்ட  சதுரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது . ஆனால் உறுதிசெய்யப்படவில்லை .

இந்த அளவுகோல்கள் நம் தஞ்சையின் அளவை மட்டும் அல்ல நம் தமிழகத்தின் செழுமை அப்பொழுது எந்த அளவு இருந்திருக்கிறது என்பதையும்  தெளிவாகிறது .

வியாழன், 23 ஏப்ரல், 2015

நம் தமிழனின் வியக்கும் தொழில்நுட்பங்கள்

இன்றைய தொழில்நுட்பங்கள் தொடாத தூரத்தை ஆயிரம் ஆண்டுகள் முன் நம் தமிழர்கள் தொட்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும் .


தஞ்சையில் உள்ள வியக்கும் அதிசயங்களில் நம் கண்ணில் இருந்து மறையும் ஒன்று .....

கோவிலின் கோபுரத்தையும் ,விமானத்தையும் அதிசயத்து பார்க்கும் அந்த நேரத்தில் இந்த வியக்கும் வேலைப்பாடு நம் கண்களில் இருந்து  மறைவதில் வியப்பு இல்லை .






















மேலும் நெருங்கி செல்வோம் இந்த வேலைப்பாட்டின் ஆழத்தை அறிய .இந்த படத்தைக் காணும் போது பூக்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது . 
ஆனால் இந்த அமைப்பினும் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் நம் கண்களுக்கு புலப்படுவது கடினமே. இந்த வேலைப்பாடு விமானத்தை தாங்கி உள்ள கோபுரத்தின் கிழ்ப் பகுதியில் அமைந்துள்ளது .


 .

வரிசையாக பூக்கள்இணைந்து இருக்கும்படி இந்த வேலைப்பாடுகளின் இடையில், அதாவது  இரண்டு பூக்களின் இதழ்கள் ஒரு புள்ளியில் இணையும் இடத்தில் ஒரு துளை அமைக்கப்பட்டுள்ளது .

இந்த துளைகள் 3மி.மீ கும் குறைவான விட்டம்  மட்டுமே உடையது .
இந்த துளைகளின் உள் நாம் சிறு இலையின் காம்பை மட்டுமே செலுத்த முடிகிறது .அதனுள் ஏன் நம் எழுதுகோல் கூட நுழைக்க முடியாது அவ்வளவு நுணுக்கமானது .




இந்த துளைகளில் பொதிந்துள்ள ஆச்சரியம் யாதெனில் . நம் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது ,உலகில் கடினமான பொருள்களுள் ஒன்றாக கருதப்படும் சிவப்பு  கிரானைட்  டினால்(red granite ) ஆனது .

மேலும் இவைகளில் துளையிடுவது மிகவும் கடினமான ஒன்று . இன்றைய தொழில்நுட்பத்தில் இவ்வகை நுண்ணிய துளைகள் அமைக்க வைர முனையை பயன்படுத்துகின்றனர் ( diamond tip drilling technique ).







மேலும் இதனுள் அமைந்துள்ள மற்றொரு வியப்பு இந்த துளைகள் நேரானவை அல்ல ( not a  straight drilling ) இவை குறிப்பிட்ட கோணத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் மேல் குறிப்பிட்டுள்ள புகைப்படத்தின் மூலமாக அறியலாம் .
.


அதாவது செங்கோணமாக அமைந்துள்ளது (90 degree ) இப்படிப்பட்ட மிக நுணுக்கமான துளையிடும் தொழில்நுட்பங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதை கண்டறிய முடியாத இடத்தில் ஒளித்து வைத்துள்ளான் நம் தமிழன் .....

சனி, 18 ஏப்ரல், 2015

தஞ்சை அகழியை சுற்றி ஒரு பார்வை .....


தஞ்சை பற்றி என்று சொல்லிவிட்டு  இன்னும் தஞ்சை பெரியகோவில் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது இல்லையா.  நம் தஞ்சை கோவிலில் நாம்  பார்க்க போகும் முதல் இடம் ,தஞ்சை கோவிலின் வெளிப்புறத்தில்  முதலில் கண்ணுக்கு தென்படடுகிற தஞ்சை பெரிய கோவில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழி . 


ஆ) தஞ்சை அகழி


தஞ்சை கோவில் அகழி பற்றி  அறிவதற்கு  முன் நம் தமிழன் கட்டி காத்த
நீர் நிலைகள் பற்றி  தெரிந்துகொள்வோம் .

தமிழன் கட்டி காத்த 47 நீர்நிலைகள் 


1) அகழி (Moat) - கோட்டையின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நீர் அரண் .
2) அருவி (water fall)- மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது .
3) ஆழிக்கிணறு (well in sea-shore) -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 
4) ஆறு (river)- பெருகி ஓடும் நதி .
5) இலஞ்சி (reservoir for drinking and other purposes )- பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 
6) உறை கிணறு (ring well) -மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு .
7) ஊருணி (Drinking water tank) -மக்கள் பருகும் நீர் நிலை .
8) ஊற்று (spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது .
9) ஏரி(irrigation tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம் .
10) ஓடை (brook) -அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் -வாய்கால் வழி ஓடும் நீர் .
11) கட்டுக் கிணறு (built-in-well) - சரளை நிலத்தில் வெட்டி ,கல் ,செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு .
12) கடல் (sea) - சமுத்திரம் 
13) கம்மாய் (irrigation tank)- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கிய பெயர் .
14)கலிங்கு (sluice with many ventures ) -ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடையாமல் இருப்பதற்கு முன் எச்சரிகையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு 
15) கால் (channel) - நீரோடும் வழி .
16) கால்வாய்(supply channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிற்கு நீர் ஊட்டும் வழி .
17) குட்டம் (large pond) - பெருங் குட்டை .
18) குட்டை (small pond) -சிறிய குட்டம் .மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை 19) குண்டம் (small pool) -சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை .
20)குண்டு (pool)-குளிபதற்கு கேற்ற ஒரு சிறு குளம் .
21) குமிழி (rock cut well)- நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு .
22)குமிழி ஊற்று(artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று .
23) குளம் (bathing tank)- ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
24 ) கூவம் (abnormal well) -ஒரு ஒழுங்கில் அமையாதா கிணறு .
25) கூவல் (hollow)-ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் .
26) வாளி (stream)- ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி மருகால்வழி அதிகம் நீர் வெளிச் செல்லுமாறு அமைத்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை .
27) கேணி(large well) - ஆழமும் ,அகலமும் உள்ள ஒரு பெருங்கிணறு
28) சிறை (reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை .
29) சுனை (mountain pool) - மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை .
30) சேங்கை (tank with duck weed) - பாசிக்கொடி மண்டிய குளம் .
31) தடம் (beautifully constructed bathing tank) -அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம் .
32) தளிக்குளம் (tank surrounding a temple) - கோவிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை .
33) தாங்கல் (irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் .
34) திருக்குளம் (temple tank) - கோவிலின் அருகே அமைந்த நீரோடும் குளம் 
35) தெப்பக்குளம் (temple tank with inside pathway along parapet wall ) - ஆளோடஉடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம் .
36) தொடு கிணறு (dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தொண்டி நீர் கொள்ளும் இடம் .
37) நடை கேணி (large well with steps on one side) - இறங்கி செல்லும் படிக்கட்டமைப்பு  பெருங்கிணறு .
38)நீராவி(bigger tank center mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் .ஆவி என்றும் கூறப்படும்.
39 ) பிள்ளக்கிணறு (well in middle of a tank) - குளம்,ஏரிக்கு நடுவில் அமைந்த கிணறு .
40) பொங்கு கிணறு (well with bubbling spring)- ஊர்ருக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு .
41) பொய்கை (lake) -தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்து நீண்டதொரு நீர் நிலை .
42) மடு(deep place in a river)- ஆற்றின் இடையில் உள்ள அபாயமான  பள்ளம் .
43) மடை (small sluice with single venture ) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு .
44) மதகு (sluice with many ventures) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள ,பல கண்ணுள்ள ஏரி 
நீர் வெளிப்படும் மடை 
45) மறு கால் (surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46) வலயம் (round tank) - வட்டமாய் அமைந்த குளம் .
47) வாய்க்கால் (small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் .


இப்பொழுது அனைவருக்கும்  கொஞ்சம் தலை சுற்றி இருக்கும் 

அதனால் மீண்டும் நம் தஞ்சைக்கு செல்வோம் 

அகழிகள் மன்னர்கள் வசித்த இடத்தை பாதுகாக்கவும் ,நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தபட்டன .
தஞ்சை கோவில் கி.பி 1010 -ம் ஆண்டு ராஜா ராஜா சோழனால் கட்டி முடிக்கப்பட்டது .கோவிலை சுற்றி 3 கி. மி  தூரம் இந்த அகழி அமைந்துள்ளது .மேலும் நாம் முன் பார்த்த பெரிய கோட்டையை சுற்றியும் அகழி அதற்கு பின் வந்த நாயக்க மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது .
இன்று வரை நம் தஞ்சை கோவில் நிமிர்ந்து நிற்க இந்த அகழியும் முக்கிய காரணம் ஏனெனில் அன்று இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகவும் 
அவை அன்னியர்களிடம் இருந்து கோவிலை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது.

தஞ்சை கோவில் அகழி  படங்கள் :



தஞ்சை அகழியின் நிலை இன்று  :


சிறிய கோட்டை அகழி மதில் இடிந்து விழுந்த பகுதி :

சிறிய கோட்டை அகழி சில மாதங்கள் முன் இடிந்து விழுந்தது பின் இந்த பகுதி தற்பொழுது மாநகராட்சி இடம் இருந்து இந்திய தொல்பொருள் ஆராச்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது .